Tuesday, September 4, 2018

சீராக வாழ்வோம் : எண்ணம் ஆராய்தல் பயிற்சி

எண்ணம் ஆராய்தல் பயிற்சி
=========================

சீராக வாழ்வோம் :
---------------------------

தேவை, பழக்கம், சூழ்நிலை, பிறர் மனத்தூண்டல் மற்றும்
தேவையால் எழுந்ததொரு கருவமைப்பு, தெய்வீகம் என்ற ஆறும்
தேவைகளாம் எண்ணமாய் மலர்தல் கண்டு சிந்தித்துத்
தேவைகளை அளவுமுறை அறிந்து கொள்வோம்; சீராக வாழ்வோம்.
- வேதாத்திரி மகரிஷி

நம் மனதில் எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உதித்துக்கொண்டே
இருக்கின்றன. இவை அனைத்தும் நல்லவைகளா என்று கவனித்தால்
இல்லை. தவறான எண்ணங்களும் அதிகமாகவே உதிக்கின்றன.
இங்கே நல்ல எண்ணங்கள் பற்றி சிந்திக்க ஒன்றும் இல்லை.
ஏனெனில் அவை அனைவருக்கும் நன்மை அளிக்கக் கூடியவை !

தவறான எண்ணங்கள் பற்றியே ஆராயவேண்டி உள்ளது. இவைகளை
அடக்க முடியவில்லையே என்று நினைக்கிறோம். எண்ணங்களை
அடக்க நினைத்தால் அடங்காது. அறியநினைத்தால் மட்டுமே,
எண்ணங்களை அடக்க முடியும். இந்த எண்ணங்கள் எங்கிருந்து
தோன்றுகின்றன. என்ன காரணத்தினால் தோன்றுகின்றன என
ஆராய வேண்டும். எண்ணங்கள் தோன்றும் இடம் மனம்.

அங்கே
நம் செயல்கள் அனைத்தும் பதிவாகி உள்ளன. இவைகளே
எண்ணங்களாக மலர்கின்றன. ஆம். எண்ணங்களின் தொகுப்பே
மனம். மனதின் எழுச்சிநிலையே எண்ணம். கடலும் அலையும்
போல. மனம் கடல் போலாகும். எண்ணம் அலை போலாகும்.

எண்ணங்கள் தோன்றும் காரணங்கள் ஆறு !
(1) தேவையால் எழும் எண்ணம்.
(2) பழக்கத்தால் எழும் எண்ணம்.
(3) சூழ்நிலையால் எழும் எண்ணம்.
(4) பிறர்மனத் தூண்டுதலால் எழும் எண்ணம்.
(5) கருமையம் அல்லது பாரம்பரியத்தால் எழும் எண்ணம்.
(6) தெய்வீக எண்ணம்.

இவைகளைத் தனித் தனியாக ஆராய்வோம் !

(1) தேவையால் எழும் எண்ணம் :
உடலில் உண்டாகும் துன்ப உணர்வுகளை போக்க எழும்
எண்ணம். பசி, தாகம், உடை, இருப்பிடம், வாழ்க்கைத்துணைப்
போன்றவை.

(2) பழக்கத்தால் எழும் எண்ணம் :
தினமும் காலையில் விழித்தவுடன் காபி குடிக்கவேண்டும்
என்று தோன்றுகிறது. இது ஏன்? பழக்கிவிட்டோம் மனத்தை.
இந்த பழக்கம்தான் இந்த எண்ணம் தோன்றக் காரணம்.

(3) சூழ்நிலையால் எழும் எண்ணம் :
சாலையில் சென்றுகொண்டிருக்கிறோம். கடைகளில் எத்தனையோ
பொருட்களை கட்டித் தொங்க விட்டிருக்கீறார்கள். சில பொருட்களை
பார்த்த உடன் வாங்கவேண்டும் என்று தோன்றுகிறது. வீட்டிலிருந்து
வெளியே கிளம்பும்போது அப்பொருளை வாங்கவேண்டும் என்று
எண்ணவில்லை. ஆனால் வாங்கிவிட்டோம். இதுவே சூழ்நிலையால் எழும் எண்ணம்.

(4) பிறர்மனத் தூண்டுதலால் எழும் எண்ணம் :
புகைப் பிடித்தல், மது அருந்துதல் போன்றவை. யாரும் விரும்பி
இந்தச் செயலை செய்வதில்லை. நண்பர்களின் தூண்டுதலே
இதற்குக் காரணம். இதுவே பிறர்மனத் தூண்டுதலால் எழும்
எண்ணம். சில நேரங்களில் நல்ல பழக்கங்களும் இக்காரணத்தால்
வர வாய்ப்புண்டு. மனவளக் கலை மன்றங்களுக்கு வரும்
அன்பர்கள் அனைவரும் பிறரால் அழைத்து வரப்பட்டவர்களே.

(5) கருமையம் அல்லது பாரம்பரியத்தால் எழும் எண்ணம் :
இரண்டு பெற்றோர்களுக்குள் சண்டை இருந்திருக்கலாம்.
அவர்கள் ஒருவரை ஒருவர் பழிவாங்க முயற்சி செய்திருக்கலாம்.
அவர்கள் ஆயுளுக்குள் அது முடியாமல் போயிருக்கலாம். இந்த
எண்ணம் அவர்கள் குழந்தைகளுக்கு வரும் வாய்ப்புண்டு.
அவர்களுடைய மகன்கள், எந்த காரணமும் இல்லாமலே
தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு பழிவாங்கிக்
கொண்டிருக்கிறார்கள். இதுவே கருமையம் அல்லது
பாரம்பரியத்தால் எழும் எண்ணம். மற்றொரு உதாரணம் :
ஒருவர் தான் இருக்கும் ஊரில் ஒரு பள்ளிக்கூடம் கட்டலாம்
என்று நினைத்திருக்கலாம். ஆனால் அவரால், அவரது
ஆயுளுக்குள் முடியாமல் போயிருக்கலாம். இந்த எண்ணம்
அவரது மகனின் மனிதில் தோன்றி, அவர் அந்த பள்ளிக்கூடம்
கட்டியிருக்கலாம். பெற்றோரின் விருப்பம் மகனால் நிறைவேற்றப்பட்டது.

(6) தெய்வீக எண்ணம் :
யார் எந்த நற்காரியம் செய்தாலும் அது அவர்கள் மனதில்
தோன்றுவதற்கு காரணம் தெய்வீக எண்ணம்தான். இந்த தெய்வீக எண்ணம் எப்போதுமே சமுதாயத்துக்கு நன்மையே செய்விக்கும்.

இந்த ஆறு காரணங்களால் தோன்றும் எண்ணங்களில்
தெய்வீக எண்ணம் தவிர மற்றவைகள் நன்மையுமளிக்கும். தீமையுமளிக்கும். இந்த எண்ணங்களை செயல்படுத்தும் முன்
ஒருமுறைக்கு பலமுறை யோசித்து நன்மைதரும்
செயல்களை மட்டும் செய்து, தீமைதரும் செயல்களைத்
தவிர்த்து வாழ முற்பட்டால் நமக்கும் துன்பமில்லை.
சமுதாயத்துக்கும் துன்பமில்லை. தீய எண்ணங்களை
தவிர்ப்போம். நல்ல எண்ணங்களை வளர்ப்போம்

வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !