Wednesday, December 25, 2013

“நான் டிக்கெட் எடுக்கத் தேவையில்லை’

ஒரு பஸ் கண்டக்டர் இருந்தார்.. தினமும் அவருக்கு ஒரே ரூட் தான்.

ஒரு நாள் வழக்கமான பாதையில் பஸ் பயணித்துக் கொண்டிருந்தது.

நிறுத்தங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது.. ஒரு நிறுத்தத்தில் முரட்டுத்தனமான மனிதன் ஒருவன் ஏறினான். பெரிய மீசையும் தடித்த உருவமுமாய் இருந்தவனைப் பார்த்த எல்லோரு க்குமே கொஞ்சம் அச்சமாய் தான் இருந்தது.

கண்டக்டர் அவனிடம் சென்று, “டிக்கெட்’ என்று கேட்டார். அவன் உடனே, “எனக்கு டிக்கெட் வேண்டாம்’ என்று சொல்லி சட்டென்று முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக் கொண்டான்.

“ஏன் டிக்கெட் வேண்டாம்’ என்று கேட்க கண்டக்டருக்கு பயம், தள்ளி வந்து விட்டார்.

மறுநாளும் இதே கதை. “எனக்கு டிக்கெட் வேண்டாம்’ என்று முறைத்தக் கொண்டோ சொல்லக் கண்டக்டர் வந்து விட்டார். இப்படியே ஒரு வாரம் கழிந்தது..

கண்டக்டருக்கு எரிச்சல் அதிகரித்தக் கொண்டே இருந்தது.. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணினார்.

அவன் பலசாலியாக இருப்பதால் தானே பயமாக இருக்கிறது, நாமும் பலசாலியாவோம் என்று எண்ணி உடற்பயிற்சிகள் செய்யத் துவங்கினார்..

தற்காப்பு கலை வகுப்புகளுக்குப் போனார், ஆறு மாதங்கள் இப்படியே போனது.

கண்டக்டரின் உடல் வலுவானது.. பயம் கொஞ்சம் போனது. இன்று அந்த தடியனிடம் டிக்கெட் ஏன் எடுப்பதில்லை என்று கேட்டு விட வேண்டும் என்று பஸ்ஸில் ஏறினார்.

இரண்டு ஸ்டாப்புகள் கழித்து அவன் ஏறினான். கண்டக்டர் டிக்கெட் கேட்க அவன் வழக்கம் போல், “நான் டிக்கெட் எடுக்கத் தேவையில்லை’ என்று சொல்லி தலையைத் திருப்பிக் கொண்டான்.

கண்டக்டர் தன் தைரியத்தையெல்லாம் வர வழைத்துக் கொண்டு “ஏன் தேவையில்லை?’ என்று விறைப்பாய் கேட்டார்.

அதற்கு அவன் சொன்ன பதில், “நான் பஸ் பாஸ் வைத்திருக்கிறேன்’.’

ஒரு பழமொழி:
பிரச்னைகளை ஆராயாமல் பயப்படக் கூடாது!

செத்தாண்டா சேகரு!!!!!!!!!!!

கணவனோட பிறந்தநாள் அன்று மனைவியை அழைத்துக்கொண்டு அவன் தியேட்டருக்கு படம் பார்க்க போனான்..அதுவும் "மூன்றாம் உலகம்".. என்ற நச் படத்துக்கு.. 
.
"..ஹே ஜானி..!! என்ன மேன்.!! இன்னிக்கு சூப்பரா ட்ரெஸ் பண்ணி இருக்கே.!!! என்ன விஷேசம்..!!" என்றார் வாசலில் டிக்கட் குடுப்பவர்..
.
"..அப்போ..!! நீங்க அடிக்கடி இங வர்ர ஆள் போல இருக்கே.!!".. என்று மனைவி சந்தேகத்தை ஸ்டார்ட் பண்ணினாள்.
.
"...ஐயையோ..!! இல்ல சுதா..!! அவன் என்கூட படிச்சவன்..!! இப்போ தியேட்டர்ல வேலை பாக்குறான் டா..! அவ்ளவுதான்..!".. என்று மனைவியை கூல் பண்ண பார்த்தான்..
.
"..அடடா..! வீணாக சந்தேக பட்டுடோமே"..ன்னு மனைவி சமாதானமாகி , அவருடன் உள்ளே சென்றாள்..
.
"..பாப்கார்ன் வாங்கிட்டு போகலாம்".. என்று முடிவுபண்ணி அவன் காண்டீனை நோக்கி சென்றான்..மனைவியும் கூட பின்னாலே போனாள்..
.
"..என்ன ஜானி..!! சில்லறை இல்லையா..!! எப்ப பாரு 500 ரூபா நோட்டா தந்து எங்களை சங்கட படுத்துறே..". என்று பாப்கார்ன் விற்பவன் சொன்னதும் மனைவிக்கு நட்டுகிட்டது.. கணவன் கொலைவெறியோடு காண்டீன் காரனை முறைத்துவிட்டு இடத்தை காலிசெய்தான்.
.
மனைவி கேட்பதற்கு முன்னாலேயெ அவனே முந்திக்கொண்டு.. "..அப்டி பார்க்காதே சுதா..!! எங்க ஆபீஸ்ல பியூனா வேலை பார்த்தான்னு சொன்னேன்ல..! அவந்தான் இப்பொ இஙக வேலை பார்க்கிறான்"....அப்பிடி இப்பிடின்னு சமாளிக்க பார்த்தான்..
.
மனைவிக்கு லைட்டா சந்தேகம் வர ஆரம்பித்தது..."..பியூன் எல்லாம் வாடா போடான்னு பழகுற அழவுக்கு உங்க ஃப்ரெண்ட்ஷிப் இருக்கு.".என்று முணுமுபுத்தபடி கோபத்தை வெளிக்காட்டிகொள்ளாமல் தியேட்டர் வாசலுக்கு சென்றாள்..
.
டிக்கட் கிழிப்பவன் ஏதாவது ஏழரையை போட்டுவிட கோட்டது என்று கொலை நடுக்கத்துடன் வாசலுக்கு சென்றான் கணவன்.
.
"..வழக்கமா படம் போட்ட அப்புறம் இருட்டுக்குள்ள தான் போவே..!! இன்னிக்கு என்ன சீக்கிரமே.. உனக்கு மச்சம்டா.. என வாசலில் டிக்கட் கிழிப்பவன் வில்லங்கத்தை ஆரம்பித்து வைத்தான்..
.
அவ்வளவுதான் மனைவிக்கு தாறுமாறாக ப்ரெஷர் எகிறி, டென்ஷன் ஆகி திடீரென தியேட்டரை விட்டு வெளியே ஓடினாள்..ஏழரை ஆரம்பித்துவிட்டதை உணர்ந்த கணவனும் அவளை துரத்தியபடி ஓடினான்..
.
வெளியே வந்த அவள், ஒரு ஆட்டோவை மறித்து அழுதபடி ஏறினாள்.. நிலைமை சீரியஸ் என்பதை உணர்ந்த கணவனும் பாய்ந்து ஆட்டோவுக்குள் ஏறினான்..
.
"..என்ன ஜானி சார்...! வழக்கமா நச்சு ஃபிகரை தள்ளிக்கிட்டு வருவிஙக..!! இன்னிக்கு என்ன சார்!! இந்த அட்டு ஃபிகர்தான் மாட்டிச்சா..!! போங்க சார்..!! வழக்கமா போற லாட்ஜ் தானே போவணும்.. என்றான் ஆட்டோக்காரன்..
.
மிச்சத்தை நீங்களே யோசிச்சுக்குங்கோ..!!!!

Saturday, December 21, 2013

அலர்ட் ஆறுமுகம்******

ஒரு மருத்துவ வகுப்பின் முதல் நாள் ஆசிரியர் ஒரு பிணத்தை வைத்து பாடம் நடத்த ஆரம்பித்தார்.

"ஒரு மருத்துவனுக்கு மிக முக்கியமானது மூன்று விஷயங்கள் ஒன்று நோயாளியின் உடலை தொடவோ, பார்க்கவோ கூச்சப்படக்கூடாது அடுத்தது எதையும் நன்றாக கவனிக்க வேண்டும்"
என்று சொல்லிவிட்டு தன் விரலை பிணத்தின் வாய்க்குள் விட்டு பின் வெளியே எடுத்து விரலை முத்தமிட்டார்.பிறகு மாணவர்களிடம்,"சரி எல்லோரும் நான் செய்தது போல செய்யுங்கள்" என்றார்.
மாணவர்கள் மிகவும் தயங்கினர் ஆனால் நேரம் ஆக ஆக எல்லோரும் செய்ய ஆரம்பித்தார்கள்.
ஒரு கட்டத்தில் எல்லோரும் செய்து முடித்திருக்க ஆசிரியர்,

"எல்லோரும் முடித்தாயிற்றா? நான் பிணத்தின் வாய்க்குள் விட்டது ஆள் காட்டி விரல், முத்தமிட்டது நடு விரல்....இனியாவது நன்றாக கவனியுங்கள்"

இதிலிருந்து நீங்கள் கற்கும் நீதி " எப்போவும் அலர்ட் ஆறுமுகமா இரு".

Sunday, December 15, 2013

காரை தொலைத்த மனைவியின் சோகக் கதை – சிரிக்க மட்டும்

காரை தொலைந்த கதைசிரிக்க சிந்திக்கநகைச்சுவை கதை
ஒரு பெண் தனக்கு நடந்த சோகக் கதையை இங்கே விவரிக்கிறாள்.. அவளுடன் சேர்ந்து நாமும் பயணிப்போம்..

carநான் எனது அலுவலக மீட்டிங்கை முடித்துக் கொண்டு வெளியே வந்தேன். வழக்கம் போல எனது பையில் கார் சாவியை தேடினேன். என்னால் ஆன மட்டும் பையின் அனைத்து மூலை முடுக்குகளையும் தேடிவிட்டேன்… இல்லைவே இல்லை என்று சொல்லிவிட்டன கை விரல்கள். அந்த விரல்களுக்கு கண்ணில்லை என்று நினைத்து பையை ஒரு முறை கண்களால் துளாவினேன். இல்லை கண்களும் அதே பதிலைத் தான் சொன்னது.

மூளையில் திடீரென ஒரு பல்ப் எரிந்தது… ஒரு வேளை காரிலேயே சாவியை விட்டு விட்டு வந்திருப்பேனோ.. (அய்யோ எத்தனையோ முறை காரில் சாவியை வைத்து விட்டு வறாதே என்று கணவர் திரட்டியுள்ளார். காரிலேயே சாவி இருந்தால் சாவி தொலையாது என்பது எனது நினைப்பு. ஆனால் காரே தொலைந்துவிடும் என்பது அவரது தரப்பு).. சரி இறுதியாக ஓடிச் சென்று பார்க்கிங்கில் தேடினேன்.. அய்யோ எனது கணவர் தரப்பு தான் சரி.. காரை காணவில்லை.. ஒரு நிமிடம் மூளையில் எரிந்து கொண்டிருந்த பல்ப் பளிச்சென்று எரிந்து வெடித்தது.

என்ன செய்வது என்று தெரியாமல், காவல்துறைக்கு போன் செய்து, என் பெயர், விலாசம், கார் எண், காரை பார்க் செய்த இடம், காணாமல் போன நேரம் எல்லாவற்றையும் விரிவாகக் கூறினேன். காவலரும் உடனடியாக நான் இருக்கும் இடத்துக்கு வருவதாகக் கூறினார்.

சற்று ஆஸ்வாசப்படுத்திக் கொண்டு எனது கணவருக்கு போன் செய்ய முடிவு செய்தேன். போனை எடுத்து கணவருக்கு ரிங் செய்தேன். எடுத்த வேகத்தில், என்னங்க கார் சாவியை காரிலேயே வைத்து விட்டு சென்றுவிட்டேன். வந்து பார்த்தால் காரைக் காணவில்லை என்று கொட்டினேன்.

சற்று நேர மௌனத்துக்குப் பிறகு இடியட் என்று மட்டும் காட்டமாக பதில் வந்தது.

நானே ஆரம்பித்து… மன்னிச்சிடுங்க.. என்ன வந்து அலுவலகத்தில் இருந்து கூட்டின் போறீங்களா என்று கேட்டேன்.

அதற்கு அவரிடம் இருந்து வந்த பதில் என்னை சுக்குநூறாக்கியது… “ஹேய்.. இன்று காலை நான் தான் உன்னை காரில் கொண்டு வந்து அலுவலகத்தில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன். இங்கு போலிஸ் காரர் உன் காரை திருடிவிட்டதாக என்னை பிடித்து வைத்துள்ளார்.. அவரிடம் உண்மையை விளக்கிவிட்டு உன் அலுவலகத்துக்கு வந்து உன்னை அழைத்துச் செல்கிறேன்” என்றாரே பார்க்கலாம்.

என்ன வட போச்சா…  

Thursday, December 12, 2013

நம்ம ஏன் இப்படி இருக்கிறோம்

கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார்,

"நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய்.

இதற்கு கழுதை சொன்னது
"நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்."

கடவுள் கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார்

"நீ மனிதனின் வீட்டைகாக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு நாய் கூறியது,
"கடவுளே, 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு 15 வருஷம் போதும்"

கடவுள் நாயின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து கடவுள் குரங்கை படைத்து அதனிடம் சொன்னார்

"நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும். நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு குரங்கு கூறியது "20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்"

கடவுளும் குரங்கின்ஆசையை நிறைவேற்றினார்.

கடைசியாக மனிதனை படைத்து அவனிடம் சொன்னார் " நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன் நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு மனிதன் கூறினான் "20 வருஷம் ரொம்ப குறைவு.

கழுதை வேண்டாம் என்ற 30 வருடங்களையும், நாய் வேண்டாம் என்ற 15 வருடங்களையும், குரங்கு வேண்டாம் என்ற 10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு"

கடவுள் மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்.

அன்று முதல்
மனிதன் முதல் 20 வருடங்களை ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக.

கல்யாணம் செய்து கொண்டு அடுத்த 30 வருடங்களை கழுதை போல் எல்லாம் சுமைகளை தாங்கி கொண்டு, அல்லும் பகலும் உழைக்கிறான்.

குழந்தைகள் வளர்ந்தபிறகு, அடுத்த 15 வருடங்களுக்கு அவன் வீட்டின் நாயாக இருந்து, அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான். மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்.

வயதாகி, Retire ஆன பிறகு குரங்கு போல் 10 வருடங்களுக்கு மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டிற்கும், மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டிற்கும் தாவி, தன் பேரகுழந்தைகளுக்­கு வித்தைகள் காட்டி மகிழ்விக்கிறான்...

இப்ப தெரியுதா நம்ம ஏன் இப்படி இருக்கிறோம்னு?

Wednesday, December 11, 2013

ரொம்ப நாள் சந்தேகம்............

ஒரு பையனுக்கு ரொம்ப நாளா சந்தேகம்.

முதல் மனுசன் எப்படி வந்தான்? அப்படின்னு.

அவன் அவனோட அப்பா கிட்டே போய், அப்பா, முதல் மனுசன் எப்படி தோணினான். அப்படின்னு கேட்டான்.

அதுக்கு அவர் சொல்றாரு, நாமெல்லாம் ஆதாம் ஏவாள் மூலமா உலகுக்கு வந்தவங்க. அப்படின்னு பதில் சொல்றார்.

இருந்தாலும் பையனுக்கு குழப்பம் இன்னும் தீரலை.
அவனோட அம்மா கிட்டே போய் கேட்குறான்.

அதுக்கு அவங்க சொல்றாங்க, நாமெல்லாம் குரங்கிலிருந்து வந்தவங்க அப்படின்னு.

இப்போ இன்னும் குழப்பமாயிடுச்சி பையனுக்கு. ரொம்ப யோசனையா உட்கார்ந்து இருக்கான்.

அதை பார்த்து அவங்க அப்பா, என்னடா சந்தேகம் இன்னும் தீரலையான்னு கேட்குறார்.

அந்த பையன் அவங்க அம்மா சொன்னதை சொல்றான்.

அப்பா உடனே சொல்றாரு, ரெண்டுமே கரெக்ட் தான்டா. நான் எங்க வம்சாவளியை சொன்னேன். உங்கம்மா அவ வம்சாவளியை சொல்லி இருக்கா அப்படின்னு.

பையன் இப்போ ரொம்ப தெளிவாயிட்டான்.

அப்பாவை
கேட்டான், என்னப்பா இன்னைக்கு சாப்பாடு உங்களுக்கு வெளியிலையா..


:D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D

Tuesday, November 12, 2013

எலித்தொல்லை

ஒரு ஊரில் எலித்தொல்லை. அதைப் பார்த்த ராஜா, ”ஒரு செத்த எலி கொண்டு வந்தால் பத்து ரூபாய் தரப்படும்,”என்று அறிவித்தார்.
மக்களும் நிறைய எலிகளைக் கொன்று பையில் போட்டு அரண்மனையில் கொடுத்துப் பணம் பெற்றுச்சென்றனர்.
அரண்மனை துர்நாற்றம் எடுக்க ஆரம்பித்தது. அரசன் உடனே செத்த எலியின் வாலைக் கொண்டு வந்தால் போதும் என்று அறிவித்தார்.
வாலைக் கொண்டு வந்து பரிசு வாங்கும் மக்களின் எண்ணக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருந்தது. அனால் எலித்தொல்லை குறையவில்லை.
இது பற்றி அரசன் தீவிரமாக விசாரித்ததில் தெரிய வந்தது;
பணம் கிடைக்குமே என்று மக்களே வீட்டில் எலி வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள்!
இலவசங்கள் வழங்குவதால் மக்கள் பிரச்சினைகள் தீர்ந்து விடாது.வேறு உருவத்தில். உருவெடுக்கும் .

Sunday, November 3, 2013

*** புதிர் விரும்பிகளுக்கு மட்டும் ***


முன்னொரு காலத்தில் பாண்டிய நாட்டின் அரசபைக்கு மூன்று இளைஞர்கள் வந்தார்கள். அவர்கள் யார் என்று அரசன் விசாரித்தான்.

"அரசே, நாங்கள் மூவரும் ஒவ்வொரு வகையிலே திறன் மிக்கவர்கள். எங்களுக்கு நுட்மனான உணர்வு உள்ளது. இதில் எங்களில் யார் சிறந்தவர் என்பதில் விவாதம் எழுந்துள்ளது. அதை இந்த அறிஞர்களின் சபையிலே தீர்த்துக்கொள்வதற்காகவே இங்கே வந்துள்ளோம்" என்றார்கள்.
"சரி உங்கள் நுட்பமான உணர்வு என்ன என்பதை விளக்கமாகச் சொல்லுங்கள் " என்றான் அரசன்.

" அரசே, நான் உணவில் நுட்பமான உணர்வு கொண்டவன். அடுத்தவன், பெண்களைப் பற்றிய நுண்ணறிவு கொண்டவன். மற்றவன் படுக்கை விஷயத்தில் சிறந்த அறிவுடையவன்" என்றார்கள்.

"அப்படியா? " என்று ஆச்சர்யப்பட்ட அரசன் அவர்களைச் சோதித்துப் பார்த்து தீர்ப்புக் கூற நினைத்தான்.

அதனால் மூனாவதான படுக்கை அறிவாளனை அழைத்தான். ஒரு கட்டிலின்மேல் ஏழு இலவம் பஞ்சு மெத்தைகளை அடுக்கி, அதன்மேல் விலை யுஅர்ந்த மென்மையான பட்டுத் துணியை விரித்து அதன்மேல் படுக்கும்படி கூறினான்.அவனும் படுத்தான். சிறிது நேரத்தில் முதுகில் ஏதோ கடிபட்டவன்போல் எழுந்து, " அரசே, இந்த மெத்தைக்குள் ஏதோ ஒன்று இருக்கிறது. அது எனது முதுகை உறுத்துகிறது " என்றான். அரசன் பணியாட்களிடம் மெத்தையை ஆராயும்படி கூறினான். ஏழாவது மெத்தைக்கு அடியிலே ஒரு தலைமுடி கிடந்தது. அரசன் அவனது நுட்பமான அறிவைக் கண்டு வியந்தான்.

பேரழகான பெண் ஒருத்தியை, வாசனைத் திரவியங்கள் கலந்த நிரில் குளிக்கவைத்து, சந்தனம், ஜவ்வாது பூசி, பரிமள சுகந்தங்கள் வீசும் வாசனை சாம்பிராணிகளை ஒரு அறையிலே கொளுத்தி வைத்து, அந்தப் பெண் தலையிலே மணம் வீசும் மல்லிகைப் பூக்களைச் சூடி, அவளையும் அவனையும் அந்த அறைக்குள் அனுப்பி வைத்தான் அரசன்.உள்ளே சென்றதுமே, அவள் கரங்களை ஆசையுடன் பிடித்தான் அவன். உடனே, " அய்யோ, இவள்மேல் ஆட்டின் மணம் வீசுகிறதே" என்றபடி அறையைவிட்டு வெளியே வந்துவிட்டான்.அரசன் அந்தப் பெண்ணைப் பற்றி விசாரித்தான். அவள் குழந்தையாக இருந்தபோது ஆட்டுப்பால் குடித்து வளர்ந்தாள் என்ற விஷயம் தெரியவந்தது. இரண்டாமவனின் நுட்பமான உணர்வைக் கண்டு வியந்தார்.

அதன் பிறகு மூன்றாவது இளைஞனை தன்னுடன் விருந்துண்ண அழைத்தார் அரசர்.இலையின் முன் அமர்ந்தவன்.அவனோ தனது இலையில் பறிமாறப்பட்ட சோற்றைக் கண்டதுமே, மூக்கைப் பொத்திக்கொண்டான். அரசன் என்னவென்று கேட்க, " அரசே, இந்த சோற்றில் பிணவாடை வீசுகிறதே" எப்படிச் சாப்பிடுவது? " என்றான்.

அரசன் அந்த அரிசி எங்கிருந்து வாங்கப்பட்டது என்று விசாரித்து, பிறகு அதன்மூலம் அது எங்கே பயிரிடப்பட்டது என்பதையும் விசாரித்து அறிந்தான். அந்த அரிசி விளைந்த நிலத்தில் சுடுகாட்டுச் சாம்பலை உரமாகப் போடப்பட்டதை அறிந்து , அரசன் வியப்படைந்தான்.
பிறகு அரசபை கூடியது.

அரசன் அந்த மூவரில் யார் அதிநுட்பமானவன் என்று திர்ப்பும் கூறினான்.
நண்பர்களே அரசன் கூறிய தீர்ப்பு என்னவாக இருந்திருக்கும்?

.
.
.
.
.
.

Monday, October 28, 2013

ரொம்ப நாளா சந்தேகம்...

ஒரு பையனுக்கு ரொம்ப நாளா சந்தேகம்.

முதல் மனுசன் எப்படி வந்தான்? அப்படின்னு.

அவன் அவனோட அப்பா கிட்டே போய், அப்பா, முதல் மனுசன் எப்படி தோணினான். அப்படின்னு கேட்டான்.

அதுக்கு அவர் சொல்றாரு, நாமெல்லாம் ஆதாம் ஏவாள் மூலமா உலகுக்கு வந்தவங்க. அப்படின்னு பதில் சொல்றார்.

இருந்தாலும் பையனுக்கு குழப்பம் இன்னும் தீரலை.
அவனோட அம்மா கிட்டே போய் கேட்குறான்.

அதுக்கு அவங்க சொல்றாங்க, நாமெல்லாம் குரங்கிலிருந்து வந்தவங்க அப்படின்னு.

இப்போ இன்னும் குழப்பமாயிடுச்சி பையனுக்கு. ரொம்ப யோசனையா உட்கார்ந்து இருக்கான்.

அதை பார்த்து அவங்க அப்பா, என்னடா சந்தேகம் இன்னும் தீரலையான்னு கேட்குறார்.

அந்த பையன் அவங்க அம்மா சொன்னதை சொல்றான்.

அப்பா உடனே சொல்றாரு, ரெண்டுமே கரெக்ட் தான்டா. நான் எங்க வம்சாவளியை சொன்னேன். உங்கம்மா அவ வம்சாவளியை சொல்லி இருக்கா அப்படின்னு.

பையன் இப்போ ரொம்ப தெளிவாயிட்டான்.

அப்பாவை
கேட்டான், என்னப்பா இன்னைக்கு சாப்பாடு உங்களுக்கு வெளியிலையா...

Saturday, October 26, 2013

வக்கீலும் பெரிசும் ...

ஒரு வக்கீலும் ஒரு பெரிசும் பக்கத்து பக்கத்து சீட்டில் பிளேனில் பிரயாணம் பண்றாங்க.

வக்கீல் பெரியவரிடம் : நாம் ஒரு கேம் விளையாடலாமா?

பெரியார்: அசதியா இருக்கு. குட்டித் தூக்கம் போடலாம்ன்னு இருக்கேன்.

வக்கீல்: (வாய் சும்மா இருக்குமா?) இது இண்டரஸ்டிங். நான் ஒரு கேள்வி கேப்பேன். அதுக்கு நீங்க பதில் சொல்லிட்டா ரூவாய் 500/ தருவேன். பதில் சொல்லைன்னா நீங்க ரூபாய் 5/- கொடுத்தா போதும். அதே போல் நீங்க கேளுங்க? பதில் சொல்லாட்டி நான் ஐநூறு கொடுப்பேன். பதில் சொல்லிட்டா நீங்க ஐந்து ரூபாய் கொடுத்தா போதும். என்ன சொல்றிக?

பெரியவர்: சரி கேளுங்க.

வக்கீல்: நமக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் எவ்ளோ?

பெரியவர் ஒன்னும் பேசாமல் அஞ்சு ரூபாய் கொடுத்துட்டார்.

நீங்க கேள்வி கேளுங்கன்னார் வக்கீல்.

பெரியார்: மூன்று கால்களுடன் மலை ஏறி நான்கு கால்களுடன் திரும்ப வரும் மிருகம் எது?

வக்கீல் பதில் தெரியாமல் மூச்சு விடாம ஐநூறு கொடுத்தார். அப்புறம் பெரியவருடன் நீங்க பதில் சொல்லுங்க என்றார்.

பெரியவர்: ஐந்து ரூபாய் கொடுத்திட்டு எனக்கும் தெரியாதுன்னார். 

Thursday, October 17, 2013

உடல் மொழி



1.மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டுகிறது.

2.மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.

3.மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்.

4.நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்.

5.நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும்.

6.பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.

7.நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்.

8.நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.

9.குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும்.

10.உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.

Thursday, October 10, 2013

வினோத வழக்கு

வினோத வழக்கு
**************

மார்ச் 23, 1994......ரொனால்டு ஓப்பஸின்
உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்
தனது ரிப்போர்ட்டில் இறப்பிற்கான காரணம் அவன்
தலையில் பாய்ந்திருந்த தோட்டா என எழுதியிருந்தார்

........ஆனால் ஓப்பஸ் தற்கொலை செய்து கொள்ள
10வது மாடியிலிருந்து தற்கொலை கடிதத்தை எழுதி
்.
அவன்
விழும்போது 9வது மாடியிலிருந்து சீறிப்பாய்ந்த
தோட்டா அவனை தரை தொடும்
முன்பே சாகடித்து விட்டது.

சுட்டவனுக்கோ செத்தவனுக்கோ 8வது மாடியில்
பாதுகாப்புக்காக கட்டி வைத்திருந்த
வலை பற்றி தெரியாது.

எனவே ஓப்பஸ்
முடிவெடுத்தபடி அவன் குதித்து தன்
தற்கொலையை நிறைவேற்றியிருக்க முடியாது.

வலை அவனை காப்பாற்றியிருந்திருக்கும்.
ஓப்பஸைக் கொன்ற குண்டு 9வது மாடியின்
ஒரு போர்ஷனிலிருந்து சுடப்பட்டிருந்தது.

அந்த
போர்ஷனில் ஒரு வயதான தம்பதியினர்
வாழ்ந்து வந்தனர். வாய்த்தகராறு முற்றி கணவன்
தன்
மனைவியை நோக்கி துப்பாக்கியை நீட்டியபடி சுட்டு
போவதாக மிரட்டிக் கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்தில் கணவன்
மனைவியை நோக்கி துப்பாக்கி விசையை அழுத்த
குறி தப்பி ஜன்னல் வழியாக
வெளியேறி 10வது மாடியிலிருந்து விழுந்து கொண்டிர
ஓப்பஸைக் கொன்றது.

ஒருவன் 'ஏ' வைக் கொல்ல உத்தேசித்து, தவறி 'பி'
யைக் கொன்றால் அவன் மீது 'பி' யைக் கொன்ற குற்றம்
நிரூபணமாகும்.

ஆனால் அந்த வயதான
தம்பதியரோ தங்களுக்கு துப்பாக்கியில்
தோட்டா இருந்ததே தெரியாது என்று வாதிட்டனர்.

அந்தப் பெரியவர் ரொம்ப
காலமாகவே சண்டை போடும்போதெல்லாம்
துப்பாக்கியை நீட்டி மனைவியைக்
கொன்று விடுவதாக மிரட்டுவதை தன்
வாடிக்கையாகவே வைத்திருந்ததாகவும் ஒரு நாளும்
அவளைக் கொல்லும் எண்ணம்
தனக்கு இருந்ததில்லை என்றும் கூறினார்.

ஆகவே ஓப்பஸின் மரணம் ஒரு விபத்து.......த
ுப்பாக்கி யதேச்சையாக லோட் செய்யப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து நடந்த விசாரணையின்
போது ஒரு சாட்சி அந்த துப்பாக்கியில் குண்டுகளைப்
போட்டது அந்த தம்பதியரின் மகன் தான் என்றும் இந்த
விபத்து நடப்பதற்கு ஒரு 6 வாரங்களுக்கு முன்
அவன் துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்பியதைப்
பார்த்ததாகவும் சொன்னான்.

மேற்கொண்டு நடந்த விசாரணையில் அந்த வயதான
அம்மா தன் மகனுக்கு கொடுத்து வந்த பண
உதவியை நிறுத்தியதாகவும் அதனால்
ஆத்திரமடைந்த மகன், எப்போதும் துப்பாக்கியைக்
காட்டி மிரட்டும் தன் அப்பா ஒரு நாள்
அம்மாவை சுட்டு விடுவாரென்று நம்பி துப்பாக்கியி
குண்டுகளை நிரப்பியிருக்கிறான்.

ஆகவே துப்பாக்கியின் விசையை அவன்
இழுக்கவில்லையென்றாலும்
துப்பாக்கியை கொலை செய்யும் எண்ணத்தில் லோட்
செய்திருந்ததால் மகன் தான் கொலை குற்றவாளி.

ஆகவே ரொனால்டு ஓப்பஸின் மரணத்திற்கு காரணம்
அந்த தம்பதியினரின் மகன் தான்
என்று தெள்ளத்தெளிவாக நிரூபணமானது.

இப்போது தான் கதையின் முக்கிய திருப்பம்.
தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த மகன் தான்
ரொனால்டு ஓப்பஸ் என்பது தெரிய வந்தது. தன்
தாயைக் கொல்லத் துடித்த அவன் அது முடியாமல்
போகவும் ஏற்கனவே பண நெருக்கடியில் இருந்தவன்
மனம்
வெறுத்து 10வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை
முடிவெடுத்தான்.

குதிக்கும்போது 9வது மாடியிலிருந்து வெடித்த
துப்பாக்கியின் தோட்டா பாய்ந்து இறந்தான்.

எனவே அவர்களது மகன்
தன்னையே கொலை செய்து விட்டான்.... பிரேத
பரிசோதனையில் இறப்பிற்கான காரணம்
தற்கொலை என்று திருத்தி எழுதினர்.

படிச்சதும் உங்க தலை கிர்ர்ர்ருன்னு சுத்தினா நான் பொறுப்பில்லை  

ஒரு நல்ல செய்தியும், ஒரு துக்கமான செய்தியும்....

அது ஒரு மனநல மருத்துவமனை. அங்கே சிகிச்சை பெற்று வந்தார் ஒரு பட்டதாரி வாலிபர், ஒரு நாள் சக மன நோயாளி ஒருவன் கிணற்றில் குதித்திவிட, தன் உயிரை துச்சமென நினைத்து கிணற்றுக்குள் குதித்து அந்த நோயாளியை காப்பாற்றி விட்டார்.

அவரின் இந்த வீரதீரச் செயல் மருத்துவமனை முழுக்க பரவிவிட்டது.

அதைக் கேள்விப்பட்ட மருத்துவ நிபுணர் அந்த பட்டதாரி வாலிபரை அழைத்து அழைத்துச் சென்னார்..

"உனக்கு ஒரு நல்ல செய்தியும், ஒரு துக்கமான செய்தியும் சொல்லப் போகிறேன்" என்றார்.

"சொல்லுங்க டாக்டர்"

"நீ உனது நண்பனைக் காப்பாற்றியபடியால் நீ சுகமடைந்து விட்டாய் என நினைக்கிறேன். நீ வீடு செல்லலாம். இது நல்ல செய்தி"

"துக்கமான செய்தி நீ கிணற்றில் இருந்து காப்பாற்றிய உனது நண்பன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துவிட்டான்"

அப்போது இடைமறித்த பட்டதாரி வாலிபர் சொன்னார்,

"டாக்டர் ... அந்த நோயாளி சாகவில்லை. கிணறில் விழுந்து நனைந்தவனை ஈரம் காயட்டும் என்று நான் தான் அவனது கழுத்தில் கயிற்றினைக் கட்டி மரத்தில் தொங்க விட்டிருக்கிறேன். ஈரம் காய்ந்ததும் அவன் சுகமாகிவிடுவான்". 

நம்ம நாராயணசாமி....

ஒரு நாள் நம்ம நாராயணசாமி, சின்னதா ஒரு டிவி வாங்கனும்ன்னு ஆசை பட்டு, எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு போயிருக்கார். கடைகாரனைப் கூப்பிட்டு ஒரு சின்ன டிவியை காண்பிச்சு கேட்டார்.

"இந்த டிவி என்ன விலை?"

கடைகாரன் நாராயணசாமியை ஏற இறங்க பார்த்துட்டு சொன்னான்

"இந்த கடையில நாராயணசாமிக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..."

எப்படியும் இந்த டிவியை வாங்கிடனும்னு, விட்டுக்கு போய் தன்னோட கெட்அப்பை மாதிக்கிட்டு வந்து ‌கடைகாரனைப் பார்த்து கேட்டார்,

"இந்த டிவி என்ன விலை?"

"இந்த கடையில நாராயணசாமியைக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..." ம‌றுப‌டியும் அதையே க‌டைகார‌ன் சொல்ல‌, டென்ஷனான நாராயணசாமியைக்கு என்ன செய்றதுன்னு தெரியலை.

ந‌ம்ம திருட்டு முழி தான் இவனுக்கு காட்டிகுடுக்குதுன்னு நினைச்சு, அடுத்த முறை போகும் போது, கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு, ஒட்டு மொத்த கெட்அப்பும் மாத்திக்கிட்டு கடைக்கு போய் கேட்டார்,

"இந்த டிவி என்ன விலை?"

"ஒரு தடவை சொன்னா புரியாது? இந்த கடையில நாராயணசாமிக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..."

நாராயணசாமினால‌் பொறுக்க‌ முடிய‌லை, கடைகாரன்கிட்ட பரிதாபமா கேட்டார்,

"டிவி குடுக்க‌லைன்னா ப‌ர‌வாயில்லை, அட்லீஸ்ட், நான் நாராயணசாமி தான்னு எப்ப‌டி க‌ண்டுபிடிச்சே சொல்லு?"

கடைகாரன் சிரிச்சிக்கிட்டே சொன்னான், "இது டிவி இல்லை, மைக்ரோஓவ‌ன் அதான்" 

Monday, October 7, 2013

உயிர் போற நேரத்துல கூட!


“இந்த பஸ்ல எத்தனை வருஷமா நீங்க கண்டக்டரா இருக்கீங்க?”

“ஐந்து வருஷமா இருக்கேங்க!”

“நானும் பலகாலமா இந்த பஸ்ல பயணம் பண்ணிக்கிட்டிருக்கேன். எவ்ளோ நெருக்கடியான நேரங்களில் கூட பதட்டப்படாம, சிரிச்ச முகத்தோட
பயணிகள் கிட்ட நடந்துக்கிற உங்கள மாதிரி கண்டக்டரை பார்த்ததே இல்லை”

“தொழில்ல எவ்வளவு டென்ஷன் இருந்தாலும், மனசை லேசா வச்சிக்கணும் சார். அமெரிக்காவுல உள்ள ‘நியூரோசைக்யட்ரிக்’ நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?”

“என்ன சார் சொல்றாங்க?”

“மனுஷன் புன்னகைக்கும் போது, சிரிக்கும் போது, மகிழ்ச்சிகரமா இருக்கும் போது உடம்புல ஒருவித அலைகளை உண்டாக்கி, நியூரோ பெப்டைடுகளை உண்டாக்குமாம். இது உடம்புல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இப்படிப்பட்டவங்க தான் அதிக நாள்
ஆரோக்கியமா வாழுறாங்களாம்.

அதுமட்டுமில்ல…பொறாமை, ஆசை, கோபம் எல்லாத்தையும் கட்டுப்படுத்தினா, ஆயுள் இன்னும் கூடும்னு ஆய்வுகள் சொல்லுது. உயிர் போற நேரத்துல கூட பதட்டப்படக் கூடாது சார்”

“அடேங்கப்பா…இவ்ளோ தெரிஞ்சி வச்சிருக்கறதால தான் நீங்க எப்பவும் பதட்டப்படாம சிரிச்ச முகத்தோட வேலை செய்யிறீங்க போல!”

“ஆமாங்க!”

“ஆனா உங்க கிட்ட இருக்குற இந்த நிதானம் உங்க டிரைவர் கிட்ட இல்லைன்னு நினைக்கிறேன்”

“ஏன் அப்படி சொல்றீங்க?”

“இப்ப இந்த பஸ் எப்படி போய்க்கிட்டு இருக்குன்னு பாருங்களேன். தாறுமாறா தறிகெட்டு ஓடுற மாதிரி தெரியுது. நீங்களாவது முன் பக்கம் போய் பிரேக்-கிரேக் கழண்டு விழுந்துடுச்சான்னு பாத்துட்டு வாங்களேன், ப்ளீஸ்!”

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அங்கே போய் பாத்துட்டு வந்து தான் உங்ககிட்ட பேசிக்கிட்டிருக்கேன். வர்ற வழியில தான் எங்கயோ விழுந்திருக்கணும்னு நினைக்கிறேன்!”

“எது…பிரேக்கா?”

“இல்ல…டிரைவர்!” 

Thursday, October 3, 2013

வடிவேலுவின் மூட்டைப் பூச்சி மிஷின் லண்டனில் அமோக விற்பனை..

செப்டம்பர் 20, 2013 அன்று, இங்கிலாந்தைச் சேர்ந்த நீதிமன்றம் ஒன்று போலியான வெடிகுண்டு கண்டறியும் கருவியை பல்வேறு நாடுகளின் பாதுகாப்புத் துறைகளுக்கு விறபனை செய்த குளோபல் டெக்னிக்கல் எனும் தனியார் நிறுவனத்தின் அதிபர் கேரி போல்டனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளது. இந்த போலியான கருவிகளை பாதுகாப்புத் துறையின் எச்சரிக்கையையும் மீறி, இங்கிலாந்து அரசின் மூன்று முக்கிய துறைகளே ஊக்குவித்துள்ளன என்பது தான் இந்த மோசடியின் உச்சம்.
கேரி போல்டன்
கேரி போல்டன் – டுபாக்கூர் குண்டு கண்டறியும் கருவி
உலகின் பல்வேறு நாடுகளும் பயத்தின் காரணமாக பல்வேறு போர்க் கருவிகள், ஆயுதங்கள், பாதுகாப்பு கருவிகளை வாங்கிக் குவிக்கின்றன. முதலாளித்துவ நாடுகளில் உள்ள முதலாளிகள் இந்த சந்தையை அரசுகளின் உதவியுடன் ஆக்கிரமித்துள்ளனர். இதற்காக மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தவும் அவர்கள் தயங்குவதில்லை. 1997-ல் இத்தகைய சந்தையை குறி வைத்து கேரி போல்டன் பாதுகாப்பு கருவிகளைத் தயாரிக்கும் குளோபல் டெக்னிகல் எனும் நிறுவனத்தை ஆரம்பிக்கிறார்.
கோல்ஃப் விளையாடும் போது காணாமல் போகும் பந்துகளை கண்டுபிடிக்க உதவும் கருவியைக் காட்டி இதை வைத்து மறைத்து வைத்துள்ள வெடிகுண்டுகள் மற்றும் போதை பொருட்களை கண்டறியலாம் என்று சந்தைப் படுத்துகிறார். இங்கிலாந்து அரசின் முக்கிய துறைகளான ராணுவ அமைச்சகம், வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை, என மூன்று துறைகளும் போட்டி போட்டுக் கொண்டு குளோபல் டெக்னிகல் நிறுவனத்தை ஊக்குவித்துள்ளன.
ஒரு ப்ளாஸ்டிக் கைப்பிடி, ஒரு ஏரியல், ஒரு ஆன்டெனாவை கொண்டிருக்கும் இந்த சாதாரண கருவியை தயாரிக்க 1.83 பவுண்டுகள் (183 ரூபாய்) செலவாகும். வெறும் 183 ரூபாய்க்கு உற்பத்தி செய்த இந்த டுபாக்கூர் கருவியை பல்வேறு நாடுகளுக்கும் 15,000 பவுண்டுகள் (சுமார் 15 லட்சம் ரூபாய்) விலைக்கு விற்றிருக்கிறது க்ளோபல் டெக்னிகல் நிறுவனம். இந்த கருவியை பல்வேறு நாடுகள் தங்கள் பாதுகாப்புத் துறைக்கு வாங்கிக் குவித்துள்ளன. அந்த ஏமாளிகள் பட்டியலில் இந்தியாவும் உண்டு. அதே போல பாகிஸ்தான், எகிப்து, தாய்லாந்து, மெக்சிகோ போனற நாடுகளும் இதை வாங்கி ஏமாந்துள்ளன. குளோபல் டெக்னிகல் ஆண்டுக்கு 30 லட்சம் பவுண்டுகள் (சுமார் ரூ 30 கோடி) மதிப்பிலான கருவிகளை விற்பனை செய்திருக்கிறது.
தாய்லாந்தில் இந்தக் கருவியை உபயோகித்த போது போலியான கருவியின் தவறான சிக்னல்களால் பல அப்பாவிகள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். மனித உரிமை ஆர்வலர்களின் தொடர் போரட்டங்களால் இந்த போலிக் கருவி அம்பலத்திற்கு வந்தது.
2001-ல் இந்த கருவிகளை சோதனை செய்த பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகத்தின் நிபுணர் இந்தக் கருவியின் செயல்பாடுகள் மீது சந்தேகம் தெரிவித்தார். சுமார் 30 சதவீதம் தான் இந்தக் கருவி செயல்படுவதாக சோதனையின் முடிவில் தெரிவித்தார். இந்தக் கருவியை அனுமதிக்க முடியாது என்று எச்சரிக்கும் ஓர் சுற்றறிக்கையை ராணுவம், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் காவல் துறையின் 1000 அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார்.
ஆனால் அந்த சுற்றறிக்கையை புறம் தள்ளிவிட்டு, ராணுவ பொறியாளர்கள் குழு இந்த போலியான கருவியை பல்வேறு நாடுகளில் நடைபெற்ற ஆயுத கண்காட்சிகள், மற்றும் சிறப்பு விற்பனை கண்காட்சிகளில் வைக்க க்ளோபல் டெக்னிகல் நிறுவனத்திற்கு முழு உதவியையும் செய்துள்ளது.
இங்கிலாந்து அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை தன் சொந்த செலவில் பல கண்காட்சிகளுக்கு குளோபல் டெக்னிக்கல் நிறுவனத்தை அழைத்துச் சென்றுள்ளது. மெக்சிகோ நாட்டில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் குளோபல் டெக்னிக்கல் நிறுவனத்தின் பல வர்த்தக சந்தைப்படுத்தும் நிகழ்வுகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
                         போலி வெடிகுண்டு கண்டறியும் கருவி
போலி வெடிகுண்டு கண்டறியும் கருவி
1999-ம் ஆண்டு கேரி போல்டன் தன் போலியான கருவியை ராணுவ பாதுகாப்பு கருவிகள் சோதனை செய்யும் துறையிடம் 500 பவுண்டுகள் கட்டி சோதனை செய்யக் கோரியிருக்கிறார். இப்போழுது விற்பனை செய்யப்பட்டுள்ள ஜிடி 200 எனும் கருவியின் முன்னோடியான மோல் எனும் கருவியை தான் அவர் சோதனை செய்யக் கோரினார். சோதனை முடிவுகள் கருவியை அடாசு என்றன. ஆனால் போல்டன் அந்த சோதனை அறிக்கையை திருத்தி இந்த கருவியை சந்தைப்படுத்தியுள்ளார்.
இந்த வழக்கு விசாரணையின் போது இங்கிலாந்து அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை குளோபல் டெக்னிகல் நிறுவனத்திற்கு ஆதரவளித்ததை ஒப்புக்கொண்டுள்ளது. பெரும் சர்ச்சையையும் இங்கிலாந்து நாட்டிற்கு அவமானத்தையும் கொடுத்திருக்கும் இந்த செயல் நாடாளுமன்றத்திலும் கடுமையான விவாதத்தை கிளப்பியுள்ளது.
ஒரு தனியார் நிறுவனம் லாபமீட்ட மக்கள் வரிப் பணத்தை ஏன் வீணடிக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடை இல்லை. மறுபுறம் இந்த போலிக் கருவிகளை வாங்கிய இந்தியா மாதிரியான நாடுகளின் நிலை வெட்கக் கேடானது என்றால், இந்த கருவியினால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளின் நிலை சோகமானது. இத்தகைய டுபாக்கூர் கருவிகளை வைத்துக் கொண்டு தான் நம் நாட்டு ராணுவமும் போலீசும் வெடிகுண்டு சோதனைகளை நடத்தி தீவிரவாதிகளை பிடித்திருக்கின்றன என்றால் அவர்கள் அனைவரும் குற்றவாளிகளாக இருக்க முடியாது. போலிக் கருவிகளைக் கொண்டு போலி தீவிரவாதிகளை தான் பிடிக்க முடியும், அதாவது நிரபராதிகளை.
வடிவேலு மூட்டைப் பூச்சி ஒழிப்பு மிஷனை விற்பனை செய்த போது வயிறு குலுங்கிச் சிரித்தவர்கள் அதே மெஷினை குண்டு கண்டுபிடிப்பதற்கும் பயன்படுத்திய இங்கிலாந்து முதலாளிகளை நினைத்து என்ன சொல்கிறீர்கள்?
பார்க்க

Wednesday, October 2, 2013

துறவிகிட்ட சாப்ட்வேர் இன்ஜினியர் வந்தார்



ஒரு துறவிகிட்ட சாப்ட்வேர் இன்ஜினியர்
வந்தார்.. நல்ல தெய்வ பக்தி,அறிவாளி.
ஆனா அவருக்கு ரொம்ப
நாளா ஒரு சந்தேகம். அதாவது இந்த
பூமியில பிறந்துட்டோம். ஒரு நாள் இந்த
உலகத்தை விட்டு போகத்தான் போறோம்.
அப்படி இருக்கும்போது ஏன் நாம
நல்லது மட்டும் தான் செய்யணும்.
கெட்டது செஞ்சா, அடுத்தபிறவியில
அனுபவிக்கணும்.
அதாவது கர்மாவிடாதுன்னு
எல்லா பெரியவங்களும் சொல்றாங்க.
ஆனா எனக்கு அதுல உடன்பாடு இல்லை.
எல்லாம் சுத்த பொய். அது எப்படி நாம
செத்துபோய்ட்டா கர்மா நம்ம
கூடவே வருதும்னு அவருக்கு சந்தேகம்.
அவருடைய சந்தேகத்தை துறவிகிட்ட
சொன்னார்..துறவி கேட்டார்.
உனக்கு ஒரு வேலை கொடுக்கிறேன்.
அதை செய்வாயா?
கண்டிப்பா செய்யறேன். ஒகே.. நீ
இன்னையிலிருந்து
ஒரு பத்து நாளைக்கு நீ
ஏதாவது ஹாஸ்பிடலுக்கு போய்ட்டு வ
பத்து நாள் கழிச்சு நீ இங்க
வான்னார்..அதுக்கு நா இன்ஜினியர்..
நான் டாக்டர் இல்லை. அதுக்கு அந்த
துறவி எனக்குத்தெரியும
்..சந்தோஷமா போய்ட்டுவா..
இவரும் பத்து நாட்கள் கழித்து வந்தார்.
அப்ப அந்த
துறவி எப்படி இருந்தது என்றார்.
அதற்கு அந்த இன்ஜினியர், நான் கேன்சர்
ஹாஸ்பிடலுக்கும், இருதயம்
அறுவை சிகிச்சை ஹாஸ்பிடலுக்கும்
போனேன்.
அதற்கு அந்த துறவி கேட்டார். கேன்சர்
ஹாஸ்பிடலுக்கு போன, அதைப்
பத்தி என்ன சொல்ற. இன்ஜினியர்,
சிலருக்கு சாப்பாட்டினால,
அல்லது பரம்பரைல
யாருக்காவது கேன்சர் இருந்ததால
வந்திருக்கு.அதேபோலத்தான் ஹார்ட்
ப்ராப்ளமும். சில
வியாதி பரம்பரையா ஜீன்ல
இருக்கு.அதனால
சிலருக்கு வந்திருக்கு. நல்ல
வேளை எனக்கு அதெல்லாம் இல்லை.
என்ன சுகர் மட்டும் தான்.
அதுக்கு துறவி,உனக்கு மட்டும் தான்
சுகரா..இல்லை உங்க குடும்பத்தில
யாருக்காவது இருக்கா? அந்த
இன்ஜினியர்,எங்க பரம்பரையில நிறைய
பேருக்கு இருக்கு. ஜீன்ல
யாருக்காவது இருக்கும் போல.அதான
எனக்கும் இருக்கு
அப்ப அந்த துறவி சொன்னாரம்.
ஒரு டாக்டர் சில சமயம், சில
வியாதிகளைப்பற்ற
ி பரம்பரை வியாதி,அல்லது ஜீன்ல
இருக்கு என்று சொல்லும்போது, டாக்டர்
சொல்றதை நம்புறீங்க.நீங்க
ஆராய்ச்சி பண்ணல, அதுபோலத்தான் இந்த
கர்மாவும். நீங்க அறிவியல்
பூர்வமா யாராவது சொன்னா நம்புறீங்க.
அதுபோலத்தான் இதுவும் ஒரு ஆன்மீக
அறிவியல். நம்ம முன்னோர்கள் டாக்டர்
சொல்றாப்ல சொல்லி இருக்காங்க.
உனக்கு சுகர்
பரம்பரையா வந்தது.அதுபோலத்தான்
கர்மாவும். உன்னுடைய கர்மா மனம் என்ற
ஆன்மீக ஜீனில் இருக்கு.
நல்லது செஞ்சா,நல்லது வரும்.
மற்றவர்களுக்கு தீமை செஞ்சா நம்
கர்மா பரம்பரையா வர்ற
வியாதி மாதிரி ஜென்ம
ஜென்மா வரும். இதுதான்
ஜீன் ஜென்(மா) தத்துவம் என்றார்.
”நல்லதையே செய்வோம்.
நல்லதே நடக்கும்.”

Friday, September 27, 2013

அரை உசிரு போற மாதிரி என்னை நல்ல அடி

கணவனும்,மனைவியும் பிரிகிறார்கள்.கணவனுக்கு மனைவி மேல் எக்கச்சக்க கோபம்,அவனுக்குத் திடீரென ஒரு அற்புத விளக்கு கிடைக்கிறது.அந்த விளக்கிலிருந்து வெளியே வரும் பூதம் மூன்று வரம் தருவதாக சொல்கிறது

ஆனால் அப்படி அவனுக்கு கிடைக்கிற ஒவ்வொரு வரமும், அவனது மனைவிக்கு இரு மடங்ககக்கிடைக்கும் என்றும் சொல்கிறது.

"ஹவாய் தீவுல எனக்கொரு வீடு வேனும்"என முதல் வரம் கேட்கிறான் கணவன்,அப்படியே அவனுக்கு ஒரு வீடும் அவனது மனைவிக்கு இரண்டு வீடுகளும் கொடுக்கிறது பூதம்.

அடுத்து இரண்டு கோடி பணம் கேட்கிறான். அவனது மனைவிக்கு 4 கோடி கிடைக்கிறது

."மூணாவது வரம் கேள், நல்லா கேட்டுக்கோ,உனக்கு கிடைக்கிற எதுவானாலும் உன் மனைவிக்கு அதே மாதிரி ரெண்டு மடங்கா கிடைக்கும்" என்கிறது பூதம்.

"தெரியும்,தெரியும் அரை உசிரு போற மாதிரி என்னை நல்ல அடி" என்று மூன்றாவது வரத்தை முன்வைக்கிறான் கணவன்.

Thursday, September 26, 2013

இப்படிதான் விவாகரத்து நடக்குதோ ?



இப்படிதான் விவாகரத்து நடக்குதோ ?

படிச்சுப் பாருங்க கண்டிப்பா சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க. 

கோர்ட்டில் அந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.

அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.

“அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?”

“அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க”

“ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?”

“எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?”

“அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது”

“தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்”

“கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?”

“அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதான… அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க”

“வீட்டுக்காரரோட என்ன சண்டை?”

“வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு”

இதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை.

“எதுக்காக விவாகரத்து கேட்கிறார்” என்று அலறி விட்டு இருமினார்.

“ஓ..அதுவா… என்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம். நீங்க நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க… உங்களுக்கென்ன ரத்தக் கொதிப்பா வந்திரிச்சு? இது அபாண்டம்தானே?”

Wednesday, September 25, 2013

ஆர்க்கிமிடிஸ்



ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறான் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம் அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார் அந்த விஞ்ஞானி. சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமா?தாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில் யுரேக்கா யுரேக்கா என்று மகிழ்ச்சி கூச்சலிட்டு ஓடினார். யுரேக்கா என்றால் கிரேக்க மொழியில் கண்டுபிடித்துவிட்டேன் என்று பொருள்.

ஞானம் மானத்தைவிட பெரியது என்று நம்பி அவ்வாறு பிறந்த மேனியாக ஓடிய அவர்தான் பொருள்களின் டென்ஸிட்டி அதாவது அடர்த்திபற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 ஆம் ஆண்டு பிறந்தார் ஆர்க்கிமிடிஸ். அவரது தந்தை ஒர் ஆராய்ட்சியாளர் குடும்பம் செல்வ செழிப்பில் இருந்தது. தன் மகன் நன்கு கல்விகற்று தன்னைப்போலவே ஆராய்ட்சியாளனாக வேண்டும் என விரும்பிய தந்தை ஆர்க்கிமிடிஸை கல்வி பயில எகிப்துக்கு அனுப்பி வைத்தார்.

ஆர்க்கிமிடிஸும் நன்கு கல்வி பயின்று தான் பிறந்த சிரகூஸ் நகருக்கு திரும்பினார். இரண்டாம் ஹெயிரோ என்ற மன்னம் அப்போது சிரகூஸை ஆண்டு வந்தான். தனக்கு ஒரு தங்க கிரீடம் செய்து கொள்ள விரும்பிய அந்த மன்னன் நிறைய தங்கத்தை அளித்து நல்ல கீரீடம் செய்து தருமாறு தன் பொற்கொல்லரை பணித்தார். கிரீடம் வந்ததும் தான் கொடுத்த தங்கத்துக்கு நிகராக அது இருந்ததை கண்டு மகிழ்ந்தார் மன்னர். இருப்பினும் கிரீடத்தில் கலப்படம் ஏதேனும் செய்யபட்டிருக்குமா? என சந்தேகம் மன்னருக்கு எழுந்தது. இந்த பிரச்சினையை ஆர்க்கிமிடிஸிடம் சொன்னார் இதைப்பற்றி ஆர்க்கிமிடிஸ் பல நாள் சிந்தித்து கொண்டிருந்த போதுதான் அந்த குளியலறை சம்பவம் நிகழ்ந்தது.

தண்ணீர்த்தொட்டியில் குளிப்பதற்காக அவர் இறங்கியபோது தொட்டி நிறைய இருந்த தண்ணீரில் ஒரு பகுதி வெளியில் வழிந்தது. அது எப்போதுமே நிகழும் ஒன்றுதான் என்றாலும் மன்னரின் கலப்பட பிரச்சினைக்கான தீர்வை அந்த நொடியில் கண்டார் ஆர்க்கிமிடிஸ். அதனால்தான் ஆர்க்கிமிடிஸ் ஆடையின்றி யுரேக்கா என்று கத்திகொண்டு ஓடினார். உற்சாகம் தனிந்ததும் மன்னரிடம் இருந்து கிரீடத்தை வரவழைத்து அதன் எடையை அளந்து பார்த்தார். பின்னர் அதே எடை அளவுக்கு சுத்தமான தங்கத்தையும் வெள்ளியையும் வரவழைத்தார். சுத்தமான தங்கம் எவ்வளவு தண்ணீர் வெளியேற்றுகிறது என்பதை அறிய ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் தங்கத்தை போட்டு வெளியேறும் நீரின் அளவை கணக்கெடுத்து கொண்டார்.


அதேபோல சுத்தமான வெள்ளி வெளியேற்றும் அளவையும் கணக்கெடுத்துக்கொண்டார். கடைசியாக கிரீடத்தை தண்ணீரில் போட்டு எவ்வளவு தண்ணீர் வெளியாகிறது என்று பார்த்தார் அது சுத்த தங்கத்தில் செய்யப்பட்டிருந்தால் சுத்த தங்கம் வெளியேற்றிய அதே அளவு நீரைத்தான் கிரீடமும் வெளியேற்றிருக்க வேண்டும். ஆனால் அது சுத்த தங்கமும் சுத்த வெள்ளியும் வெளியேற்றிய நீரின் அளவுகளுக்கு இடைபட்ட அளவு தண்ணீரை வெளியேற்றியது. அதன் மூலம் கிரீடத்தில் பொற்கொல்லர் கலப்படம் செய்திருக்கிறார் என்பதை மன்னருக்கு நிரூபித்தார் ஆர்க்கிமிடிஸ். அந்த கண்டுபிடிப்பின் அடிப்படையில் அவர் எழுதி வெளியிட்ட On Blotting Bodies என்ற புத்தகம் இன்றைய நவீன இயற்பியலுக்கு அடிப்படையாக விளங்குகிறது.

ஆர்க்கிமிடிஸ் கணிதத்தில் மிகச்சிறந்து விளங்கியதோடு வான சாஸ்திரத்திலும் இயந்திர நுட்பங்களிலும் பொறியியலிலும் தன்னிகரற்று விளங்கினார். அவரது மதிநுட்பத்தை கண்டு ரோமானிய சாம்ராஜ்யமே மலைத்த ஒரு சம்பவம் உண்டு. ஒருமுறை ரோமானிய கடற்படை சிரகூஸ் நகரை முற்றுகையிட்டது. சிரகூஸ் நகரை நோக்கி நெருங்கியபோது சுமார் 500 அடி உயர குன்றின் மீதிருந்து கண்களை கூச வைக்கும் ஒளி வீசிக்கொண்டிருந்தது. ரோமானிய கடற்படை வீரர்களுகு என்னவென்று புரியவில்லை. கிட்ட நெருங்க நெருங்க ஒளியின் தக தகப்பு அதிகரித்தது. அப்போதுதான் கிரேக்கர்களுக்கு பலமாக ஆர்க்கிமிடிஸ் என்ற மேதை இருப்பது ரோமானிய கடற்படைத் தளபதி மார்க்ஸ் கிளேடியஸ் மாஸில்லஸ்க்கு நினைவுக்கு வந்தது.

ஏதோ நிகழப்போகிறது என்று சுதாரிப்பதற்குள் பாய்மரக் கப்பல்களின் படுதாக்கள் தீப்பற்றி எறிந்தன. சில நிமிடங்களுக்குள் பெரும்பாலாம கப்பல்கள் தீக்கரையாகி நாசமாயின. அப்போதுதான் ரோமானியர்களுக்கு புரிந்தது ஆர்க்கிமிடிஸ் பிரமாண்டமான நிலைக்கண்ணாடிகளை குன்றின் மீது நிறுவி அதில் சூரிய ஒளியினை குவித்து அதனை போர்க்கப்பல்கள் மீது பாய்ச்சி சாகசம் புரிந்திருக்கிறார் என்பது. இப்படி பல போர்க்காப்பு சாதனங்களையும் உத்திகளையும் உருவாக்கி புகழ் பெற்றார் ஆர்க்கிமிடிஸ். அவர்மீது பெரும் மரியாதை வைத்திருந்த ரோமானியத் தளபதி மாஸில்லஸ் எந்த சூழ்நிலையிலும் படையெடுப்பு வெற்றி அளித்தாலும் சிரகூஸில் எவரைக் கொன்றாலும் ஆர்க்கிமிடிஸிக்கு மட்டும் எந்த ஆபத்தும் நேரக்கூடாது என்று கட்டளையிட்டுயிருந்தார்.

ஆர்க்கிமிடிஸ் கடல் தாக்குதலிருந்து சிரகூஸை காப்பாற்றிய மூன்று ஆண்டுகளில் ரோமானியர்கள் மீண்டும் படையெடுத்தனர். அப்போது தனது 75 ஆவது வயதில் கடற்கரை மணற்பரப்பில் அமர்ந்து வட்டங்களையும் கோனங்களையும் வரைந்து ஆராய்ட்சி செய்து கொண்டிருந்தார் ஆர்க்கிமிடிஸ். அவரை யாரென்று அறியாத, அவரின் பெருமை தெரியாத ஒரு ரோமானிய வீரன் ஆர்க்கிமிடிஸின் நெஞ்சில் வாளை பாய்ச்சினான். அந்த கிரேக்க சகாப்தம் சரிந்தது.

கேட்டர்பில்ட் எனப்படும் கவன்கல் எறிந்து விரோதி படைகளை தாக்குவது போன்ற பல்வேறு போர்க்கருவிகளை உருவாக்கியவர் ஆர்க்கிமிடிஸ். அவர் உருவாக்கிய பல சாதனங்கள் நவீன உத்திகளோடும் வடிவமைப்புகளோடும் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் லிவர் எனப்படும் நெம்புகோல் மூலம் எப்படிப்பட்ட பளுவையும் தூக்க முடியும் என்று அவர் செய்து காட்டினார். லிவர், புலி என்ற அமைப்புகளை உருவாக்கி ஒரு கப்பலில் ஏராளமான பொருட்களை ஏற்றி வேறு எவரது துணையும் மற்றும் இயந்திரத்தின் துணையும் இன்றி தான் ஒருவராகவே அந்த கப்பலையே நகரச் செய்து காட்டினார்.    

ஒருமுறை சிரகூஸின் மன்னர் ஆர்க்கிமிடிஸிடம் உங்களால் செய்ய முடியாதது என்று எதுவுமே இல்லையா என்று கேட்க அதற்கு அவர்:


நான் நிற்பதற்கு உலகத்திற்கு வெளியே ஒரு இடம் அமைத்து கொடுங்கள் அங்கு நின்று நான் இந்த உலகத்தையே அசைத்துக் காட்டுகிறேன்...



என்று பதில் சொன்னாராம். எவ்வளவு தைரியம், எவ்வளவு தன்னம்பிக்கை, சந்தேகத்திற்கு இடமின்றி ஆர்க்கிமிடிஸின் சுவாசகாற்றாக இருந்தது தன்னம்பிக்கைதான். அதனால்தான் மலையை கூட அசைக்க முடியும் என்று அவர் நம்பினார்.

ஆபிரகாம் லிங்கன்



கடந்த இரு நூற்றாண்டுகளில் உலகிலேயே அதிகம் பலம் வாய்ந்த நபர் யாரென்று கேட்டால் பெரும்பாலோனோர் அந்தந்த காலகட்டத்தின் அமெரிக்க அதிபர்களை குறிப்பிடுவர். ராணுவ பலமும் பொருளியல் வளமும் அமெரிக்க அதிபர்களுக்கு அப்படி ஒரு தகுதியை தந்திருக்கின்றன. உலகம் இதுவரை கண்டிருக்கும் 43 அமெரிக்க அதிபர்களும் வெவ்வேறு விதங்களில் தங்கள் முத்திரையை பதித்திருந்தாலும் அவர்களுள் ஒரு சிலர்தான் உலகுக்கு தேவைப்பட்ட முக்கிய மாற்றங்களை கொண்டு வந்தனர். மனுகுலத்துக்கு மகிமையைத் தேடிதந்தனர்.  அவர்களுள் தலையாயவர் ஆபிரகாம் லிங்கன்.


1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ந்தேதி கெண்டக்கியில் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தார் லிங்கன். அவரது தந்தை தாமஸ் லிங்கன் ஒரு தச்சர். தாயார் நேன்ஸி ஆபிரகாம் லிங்கனுக்கு 9 வயது இருக்கும்போது காலமானார், குடும்ப ஏழ்மை காரணமாக லிங்கனால் சரியாக படிக்க முடியவில்லை. அவர் நீல் ஆல்ன்ஸில் வசித்தபோது அடிமைகள் என்ற பெயரில் கருப்பினத்தவர்கள் விற்கப்படுவதையும் இரும்புகம்பிகளால் கட்டப்பட்டிருப்பதையும் சாட்டையால் அடிக்கப்படுவதையும் ஒட்டுமொத்தமாக கொடுமை படுத்தப்படுவதையும் கண்டார். அப்போது அவருக்கு வயது 15 தான்.

அந்தக்கனமே அடிமைத்தனத்தை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். தனது 22 ஆவது வயதில் ஓர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் கடனுக்கு ஒரு கடையை வாங்கி வியாபாரத்தில் தோற்றுப்போனார், அடுத்து தபால்காரார் ஆனார். அதன்பிறகு அவர் தாமாகவே படித்து வழக்கறிஞர் ஆனார். 1834 ஆம் ஆண்டு தமது 25 ஆவது வயதில் இலினோய் மாநில சட்டமன்ற பதவிக்கு போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். 1833 ல் ஆண்ட் ரூட்லெஸ் என்ற பெண்ணை காதலித்து மணந்து கொண்டார். ஆனால் இரண்டே ஆண்டுகளில் ஆண்ட் நோய்வாய்பட்டு இறந்தார். 

7 ஆண்டுகள் கழித்து லிங்கன் மறுமணம் செய்துகொண்டார். 1834 ஆம் ஆண்டிலிருந்து 8 ஆண்டுகள் இலினோய் சட்டமன்றத்தின் உறுப்பினராக இருந்தார் லிங்கன். அதன்பிறகு அரசியலைவிட்டு விலகி 5 ஆண்டுகள் அவர் தனியார் துறையில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1854 ல் லிங்கனை அரசியல் மீண்டும் அழைத்தது. குடிப்பழக்கம் புகைக்கும் பழக்கம் எதுவும் இல்லாத லிங்கன் அரசியலில் கடுமையாக உழைத்தார். 

1859 ஆம் ஆண்டு நீங்கள் ஏன் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடக்கூடாது? என நண்பர் ஒருவரு கேட்டபோது அந்த தகுதி எனக்கு கிடையாது என்று பணிவாக பதில் கூறினாராம் லிங்கன். ஆனால் அப்படி கூறியவர் அதற்கு அடுத்த ஆண்டே அமெரிக்காவின் 16 ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 15 வயதில் தாம் எடுத்த தீர்மானத்தை நிறைவேற்றும் தருணம் வந்துவிட்டதாக அப்போது அவர் எண்ணியிருக்ககூடும். ஏனெனில் பதவியேற்ற இரண்டே ஆண்டுகளில் அதாவது 1862 ல் அவர் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அனைத்து அடிமைகளும் விடுவிக்கப்படுவர். அதன்பின் அமெரிக்காவில் அடிமைத்தனம் இருக்கக்கூடாது என்று பிரகடனம் செய்தார்.

அமெரிக்காவின் தெற்கு மாநிலங்கள் விவசாயத்தை நம்பி இருந்ததால் பொருளியல் வளர்ச்சிக்கு அடிமைகள் தேவை என்று அடம்பிடித்தன. மேற்கு மாநிலங்களோ தொழிலியல் பகுதிகளாக இருந்ததனால் தங்களுக்கு அடிமைகள் தேவை இல்லை என்று கருதினர். இவை இரண்டுக்கும் காரணமாக இருந்த கருத்து வேறுபாடு உள்நாட்டு கலகமாக வெடித்தன. அடிமைத்தலையை அறுத்தெரியவும் அமெரிக்காவை ஒன்றுபடுத்தவும் போர் அவசியம் என்று துணிந்தார்.

4ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப்போரில் தென்மாநிலங்கள் தோற்கடிக்கப்பட்டன. லிங்கனின் உயரிய சிந்தனைக்கு வெற்றி கிடைத்தது. ஜனவரி 1865 ல் அமெரிக்காவில் அடிமைத்தனத்தை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானம் அமெரிக்க மக்களவையில் 3 ல் 2 பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டு இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபதிராக தேர்வுபெற்றார் லிங்கன். இரண்டாவது முறையும் முழுமையாக லிங்கன் அதிபராக இருந்திருந்தால் அமெரிக்கா மேலும் அமைதிபெற்றிருக்கும். உலகம் மேலும் உய்வு கண்டிருக்கும்.

ஆனால் வரலாற்றின் நோக்கம் வேறாக இருந்தது. இரண்டாவது முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதே ஆண்டு அதாவது 1865 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ந்தேதி பெரிய வெள்ளிழைமையன்று தனது மனைவியுடன் அவர் அமெரிக்கன் கஸன் என்ற நாடகம் பார்க்க சென்றிருந்தார் லிங்கன். அவர் நாடகத்தை ரசித்துகொண்டிருந்தபோது ஜான் வில்ஸ் பூத் என்ற ஒரு நடிகன் அதிபர் லிங்கனை குறி வைத்து சுட்டான் மறுநாள் காலை லிங்கனின் உயிர் பிரிந்தது. அப்போது அவருக்கு வயது 56 தான். 



மனுகுல நாகரிகத்திற்கு முரன்பாடான அடிமைத்தலையை அகற்றுவதில் ஆபிரகாம் லிங்கன் என்ற தனி ஒரு மனிதனின் பங்கு அளவிட முடியாதது. எல்லோரும் செய்கிறார்கள் நாமும் செய்துவிட்டு போவோம் அல்லது கண்டுகொள்ளாமல் இருப்போம் என்று லிங்கன் நினைத்திருந்தால் அவர் சரித்திரத்தில் இடம் பிடித்திருக்க முடியாது. கருப்பினத்தவருக்கு சுதந்திரத்தையும் சுய மரியாதையும் பெற்று தந்திருக்க முடியாது. இன்று அமெரிக்கா ஒரு சுதந்திர தேசம் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் ஆபிரகாம் லிங்கன்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்



20 ஆம் நூற்றாண்டின் அறிவியல் உலகின் தன்னிகரற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். 


1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ந்தேதி உலக வரலாற்றில் ஒரு கருப்பு தினம். அன்று அமெரிக்க போர் விமானம் ஒன்று ஜப்பானில் அணுகுண்டு வீச சின்னாபின்னாமானது ஹிரோஸிமா, மூன்றே நாட்களுக்குள் இன்னொரு அணுகுண்டைத் தாங்கி சுக்கல் சுக்கலாக கிழிந்தது நாகசாகி. ஆயிரம் ஆயிரம் அப்பாவி உயிர்கள் பலியான அந்த செய்திகேட்டு நாள் முழுவதும் கைகளில் முகத்தை புதைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதது ஓர் உள்ளம். காரணம் அந்த ஜீவன் கண்டுபிடித்து சொன்ன சார்பியல் கோட்பாடுதான் அணுகுண்டு உற்பத்தியாவதற்கு அடிப்படையாக இருந்தது.

அறிவியல் கண்டுபிடிப்புகள் நன்மைக்காகவே பயன்பட வேண்டும் என நம்பிய அவர்தான் 20 ஆம் நூற்றாண்டின் தன்னிகரற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். 1879 ஆம் ஆண்டு மார்ச் 14 ந்தேதி ஜெர்மனியில் ஒரு யூத குடும்பத்ததில் பிறந்தார் ஐன்ஸ்டீன் அவர் பிறப்பிலேயே ஓர் மேதை இல்லை உண்மையில் மூன்று வயது வரை பேசாமல் இருந்ததால் அவருக்கு கற்கும் குறைபாடு இருக்குமோ என்று பெற்றோர் அஞ்சினர். வகுப்பிலும் சராசரி மாணவராகத்தான் இருந்தார். ஐன்ஸ்டீனுக்கு அறிவியல் மீது ஆர்வம் பிறந்தபோது வயது 4 ஒருமுறை அவருக்கு காம்பஸ் எனப்படும் திசைகாட்டி கருவியை பரிசாக தந்தார் அவரது தந்தை. அதனுள் இருந்த காந்தம் அவரை அறிவியல் உலகை நோக்கி ஈர்த்தது.

பள்ளியில் சொந்தமாகவே கால்க்ளஸ் என்ற கணித கூறை கற்றுகொண்டார் ஐன்ஸ்டீன். பின்னர் சந்தேகங்களை கேட்க தொடங்கினார். அவரது கேள்விகளுக்கு பதில் தர முடியாம ஆசிரியர் திகைத்ததாகவும் அடுத்து என்ன கேட்கப்போகிறார் என அஞ்சியதாகவும் ஒரு வரலாற்றுகுறிப்பு கூறுகிறது. சிறு வயதிலேயிருந்து வார்த்தைகளாலும் சொற்களாலும் சிந்திப்பதைக்காட்டிலும் படங்களாகவும் காட்சிகளாகவும் சிந்திப்பார் ஐன்ஸ்டைன். அவருக்கு வயலின் வாசிப்பதிலும் அதிக ஆர்வம் இருந்தது. இசைமேதை மோசார்ட்டின் தீவிர ரசிகராக இருந்த அவருக்கு மேடைகளில் கச்சேரி செய்யும் அளவுக்கு திறமை இருந்தது.

ஐன்ஸ்டீனுக்கு 15 வயதானபோது இத்தாலியில் மிலான் நகருக்கு குடியேறினர். அங்கு அவரது தந்தை வர்த்தகத்தில் நொடித்துபோனதும் சுவிட்சர்லாந்துக்கு சென்றார் ஐன்ஸ்டீன். புகழ்பெற்ற சுவிஸ் பெட்ரல் பாலிடெக்னிக் நுழைவுத்தேர்வில் அவர் தோலிவி அடைந்தார். ஆனால் அடுத்த ஆண்டு ஐன்ஸ்டீனை சேர்த்துகொண்டது அந்த பலதுறை தொழிற்கல்லூரி. அதிலிருந்து தேர்ச்சிபெற்றதும் சுவிஸ் குடியுரிமை பெற்றார் ஐன்ஸ்டீன். அவருக்கு கிடைத்த முதல் வேலை விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை பதிவு செய்து ஆராய்வது. அந்த வேலையில் அதிக ஓய்வு நேரம் இருந்ததால் அவர் சொந்தமாக பல ஆராய்ட்சிகளை செய்ய உதவியாக இருந்தது. ஆய்வுக்கட்டுரைகளையும் அவர் எழுத தொடங்கினார்.

1905 ஆம் ஆண்டு ஸூரிக் பல்கலைகழகத்தில் ஐன்ஸ்டீனுக்கு முனைவர் பட்டம் கிடைத்தது. கண்ணுக்கு புலப்படாத அணுவைப் பற்றியும் பரந்து விரிந்து கிடக்கும் ஆகாயத்தைப்பர்றியும் ஆராய்ந்த ஐன்ஸ்டீன் தியரி ஆப் ரிலேட்டிவிட்டி என்ற கோட்பாட்டை வெளியிட்டார். அதுதான் சார்பியல் கோட்பாடு அந்த கோட்பாடு மூலம் அவர் உலகுக்கு தந்த புகழ்பெற்ற கணித இயற்பியல் வாய்ப்பாடுதான்:

விஞ்ஞான உலகத்திற்கே இந்த வாய்ப்பாடுதான் அடிப்படை மந்திரமாக கருதப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பை செய்தபோது ஐன்ஸ்டீனுக்கு வயது 26 தான்.

1921 ஆம் ஆண்டு ஐன்ஸ்டீனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்க விரும்பியது நோபல் குழு. ஆனால் சார்பியல் கோட்பாடு குறித்து அப்போது விஞ்ஞானிகளிடையே கருத்து வேறுபாடு நிலவியதால் அதற்காக அல்லாமல் ஃபோட்டோ எலெக்டிரிக் எபெக்ட் என்ற கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கபட்டது. முதலாம் உலகப்போரில் ஜெர்மனி கலந்துகொண்டதற்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவித்தார் ஐன்ஸ்டீன். பின்னர் ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தபோது யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் வரும் என்று உணர்ந்த அவர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்.

1939 ஆம் ஆண்டு வேறு சில இயற்பியல் வல்லுநர்களுடன் சேர்ந்து அமெரிக்கா அதிபர் ரூஸ்வெல்டுக்கு ஒரு கடிதம் எழுதினார் ஐன்ஸ்டீன். அப்போது ஹிட்லரின் ஆட்சியில் இருந்த ஜெர்மனிக்கு அணுகுண்டை தயாரிக்கும் வல்லமை இருப்பதாகவும் வெகு விரைவில் அணுகுண்டு தயாரிக்ககூடும் என்றும் கடிதத்தில் எச்சரித்திருந்தார் ஐன்ஸ்டீன். ஆனால் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாயிற்று. ஜெர்மனி அணுகுண்டு செய்வதை அமெரிக்கா தடுத்து நிறுத்தும் என்று நம்பினார் ஐன்ஸ்டீன். ஆனால் ரூஸ்வெல்ட் நிர்வாகமோ ஐன்ஸ்டீனுக்கு தெரியாமலே சொந்தமாக அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது.

அதன்விளைவுதான் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு உலக வரலாற்றை ஒருகனம் இருட்டடிப்பு செய்த நாகசாகி ஹிரோஸிமா சம்பவம். E=Mcஎன்ற மந்திரம்தான் அணுகுண்டின் அடிப்படையாக அமைந்தது. அந்த தவிப்பு இறப்பு வரை ஐன்ஸ்டீனை உறுத்தியிருக்கும். ஆனால் அந்த ஒரு கருப்பு புள்ளியைத் தவிர்த்து ஐன்ஸ்டீனின் கோட்பாட்டால் பல நன்மைகளை பெற்றிருக்கிறது உலகம். உண்மையில் சர் ஐசக் நீயூட்டனின் கண்டுபிடிப்புகள் பைபிலில் பழை ஏற்பாடு என்றால் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடுகள் பைபிலின் புதிய ஏற்பாடு என ஒரு ஒப்பீடு கூறுகிறது.

தங்கள் இனத்தவர் என்ற பெருமைப்பட்ட இஸ்ரேல் தங்கள் நாட்டுக்கே அதிபராகும்படி ஐன்ஸ்டீனுக்கு அழைப்பு விடுத்தது. நான் அரசியலுக்கு லாயக்கில்லாதவன் என்று சொல்லி அந்த பதிவியை ஏற்க மறுத்துவிட்டார் ஐன்ஸ்டீன். சுவிட்சர்லாந்தில் படிக்கும்போது மிலவா என்ற பெண்ணை காதலித்து மணந்தார். இரு குழந்தைகளுக்கு தந்தையானார். பின்னர் மணமுறிவு ஏற்படவே எல்ஸா என்ற உறவு பெண்ணை மணந்து கொண்டார். எல்ஸா சிறிது காலத்திலேயே இறந்துவிட சுமார் 20 ஆண்டுகள் தனித்தே வாழ்ந்தார் ஐன்ஸ்டீன்.  

அணுகுண்டு தயாரிப்பதற்கு ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடுதான் என்றாலும் யுத்தங்களை அறவே வெறுத்தவர் ஐன்ஸ்டீன். உலக அமைதிக்காக குரல் கொடுத்த அவர் 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ந்தேதி தனது 76 ஆவது வயதில் காலமானார். நவீன அறிவியல் ஐன்ஸ்டீனுக்கு மிகப்பெரிய நன்றிக்கடன் பட்டிருக்கிறது. எதையுமே ஆழமாக சிந்திக்ககூடியவர் அவர். ஒருமுறை உங்களுக்கு இன்னும் எதை கண்டுபிடிப்பதில் ஆர்வம் என நண்பர் ஒருவர் கேட்க கடவுள் இந்த உலகை எப்படி படைத்தான் என்று ஒருநாள் நான் கண்டுபிடித்துவிடவேண்டும் என்று கூறினாராம் ஐன்ஸ்டீன்.  

ஐன்ஸ்டீனுக்கு வானம் வசப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று ஆழமான சிந்தனை, மற்றொன்று அறியப்படாதவற்றை பற்றிய அளவிட முடியாத தாகம்.  அந்த ஆழமான சிந்தனையும் இயற்கையைப் பற்றிய தாகமும் நமக்கு இருந்தால் நமக்கும் அந்த வானம் நிச்சயம் வசப்படும்.