Monday, June 23, 2014

ஒரு அரசியல்வாதி.....

ஒரு பலசரக்கு வியாபாரி, ஒரு ஆசிரியர், ஒரு அரசியல்வாதி மூவரும் ஒரு காட்டுக்குள் சென்ற போது வழிதவறிப் போயிற்று.

மிகுந்த அலைச்சலுக்குப் பின்னர் ஒரு விவசாயியின் வீட்டைக் கண்டு பிடித்தனர். விவசாயியிடம் ஒரு இரவு தங்குவதற்கு அனுமதி கேட்க, ''உங்களில் இருவர் தங்க அறை கொடுக்க முடியும். மூன்றாவது நபர் ஆடு, பசு, பன்றி இவை தூங்கும் கொட்டகையில் தான் தூங்க வேண்டும்,'' என்று விவசாயி சொன்னார்.

ஆசிரியர் ,''நான் போய் அங்கு படுத்துக் கொள்கிறேன்.''என்றார். மற்ற இருவரும் அறையில் போய் படுத்துக் கொண்டனர்.

கொஞ்ச நேரம் ஆனவுடன் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்த போது அங்கு ஆசிரியர் நின்று கொண்டிருந்தார். ''என்னால் அந்த நாற்றத்தைத் தாங்க முடியவில்லை.'' உடனே பலசரக்கு வியாபாரி,''சரி,சரி,நான் அங்கு போய் தூங்குகிறேன்,''என்று கூறி கொட்டகைக்குச் சென்றார்.

ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தால் வியாபாரி வாந்தி எடுத்துக் கொண்டே நிற்கிறார்.இறுதியாக அரசியல்வாதி, தான் அங்கு போவதாகக் கூறிச் சென்றார்.

ஐந்து நிமிடத்தில் கதவு தட்டப்பட்டது. ஆசிரியரும், வியாபாரியும் கதவைத் திறந்து பார்த்தனர்.

இப்போது ஆடு, பசு, பன்றி இவையெல்லாம் நின்று கொண்டிருந்தன.